இன்று ஸ்ரீ ராம நவமி! மானுடத்திற்கு மிக அருகில் வந்து சென்ற தெய்வம் ஸ்ரீ ராமன். கம்ப நாட்டாழ்வாரும், குல சேகர ஆழ்வாரும், திருவையாறு தியாக ராஜ சுவாமிகளும், பத்ராசல ராம தாசரும், துளசி தாசரும், இன்னும் எத்தனையோ மஹான்கள் ஸ்ரீ ராமனையே பரம்பொருளாக எத்தனையோ பாடல்களையும், காவியங்களையும் இயற்றி இருக்கிறார்கள்.

“கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்… காதலித்து வேதனையில் வாட வேண்டும்…” என்று விவரம் தெரியாமல் கேட்டு கொண்டிருப்பதற்கு பல லட்சம் வருடங்களுக்கு முன்பே அரசனாக பிறந்து, சாதாரண மனிதனாக கஷ்டப்பட்டு ஒவ்வொரு கஷ்டத்திலும் உயர்நிலையில் நடந்து கொள்வது எப்படி என்று வாழ்ந்தே காட்டினான் ராமன்! அவன் தன் மனைவியை மட்டும் காதலிக்க வில்லை. தர்மத்தை காதலித்தான். அதனால்தான் தர்ம சங்கடங்கள் வரும்போதெல்லாம் ராமாயணத்தில் ராமன் என்ன செய்தான் என்று நம்மை யோசித்து பார்க்க வைக்கிறது. ராமன் மனிதப்பார்வையில் தர்மத்தினின்று சிறு இழையளவாவது பிறழ்ந்திருப்பானோ என்று மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்ய வைக்கிறது.
பெற்ற தாய் தந்தையரிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? தன்னை நம்பி வாழும் மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அரசன் எப்படி இருக்க வேண்டும்? சகோதரர்கள் எப்படி இருக்க வேண்டும்? மனைவி எப்படி கணவனிடம் நடக்க வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நண்பர்களிடம், பெரியோர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? விரோதிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இன்னும் கேட்டுக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஒரே பதில் தான் – ராமாயணத்தை படியுங்கள்!
தியாக ராஜரையும், கம்பரையும் சொன்னேன். அவர்கள் எல்லாம் ராம பக்தர்கள். ராமர் யாரென்றே தெரியாத ஒருவர் அதுவும் நமது மொழிகள், கலாச்சாரங்கள், உணர்வுகள் எதுவும் தெரியாத ஆங்கிலேயர் அவருக்கு கிடைத்த பேற்றை சொல்கிறேன்.
இது நடந்தது 1884-ம் வருடம். ஆங்கிலேயர் தமிழகத்தை ஆண்டு வந்த நாட்கள். சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் இன்றும் இருக்கிற ஏரி நீர் நிரம்பியிருந்தது. ஏரியைப் பார்வையிட அப்போதைய கலக்டர், ப்ரைஸ் என்பவர் வந்திருந்தார். அவர் கோவிலையும் பார்வையிட்டார். அந்த சமயத்தில் பெரு மழையொன்று பிடித்தது. தொடர்ந்து விடாமல் பெய்து வந்தது.
ஏரி உடைப்பு எடுத்துக் கொண்டு ஊர் அழியுமோ என்று மக்கள் பயப்பட ஆரம்பித்தார்கள். அன்று நள்ளிரவில் கலக்டர் தமது தங்குமிடத்தை விட்டு ஏரியை காண சென்றார். பெய்யும் மழையில் ஏரி நிரம்பி மிக பயங்கரமாக காட்சி அளிக்க, நாடு விட்டு நாடு வந்து இங்கே இறந்து போய்விடுவோமோ என்று கலங்கினார் கலக்டர். தாம் கண்ட கோவிலில் இருந்த ராமரை நினைத்து “இறைவா… எங்களை காப்பாற்று! ” என்று கேட்க ஏரிக்கரையில் ராமரும் லக்ஷ்மனரும் வில்லேந்தி காவலிருப்பதாக கலக்டரின் கண்களுக்கு தெரிந்தது.
ஏரி உடைப்பு எடுக்க வில்லை. மறு தினம் மழையும் நின்றது. தனது பிரார்த்தனைக்கு பலன் கிடைத்ததாக மகிழ்ந்த கலக்டர் ராமர் கோவிலுக்கும் திருப்பணிகளை எல்லாம் மேற்கொண்டார். அந்த ராமருக்கு “ஏரி காத்த ராமர்” என்றே பெயர் ஏற்பட்டது. “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலக்டர் லியோநேல் ப்ரைஸ் துரை அவர்களுடையது” என்று கல்வெட்டுக்களை இன்றும் காணலாம்.

தமிழகத்தில் ராமர் கோவில் இல்லாத ஊர்களே இல்லை என்றே சொல்லலாம். ராமர் வாழ்ந்த அடையாளங்கள் இல்லாத பகுதிகளே இந்தியாவில் இல்லை. சின்ன சின்னதாக சிதறி பாரதமெங்கும் வாழும் மக்களின் இந்த நம்பிக்கைகள் தான் பாரத நாட்டையே ஒன்று படுத்துகிறது. ஒரு சில நூறு கிலோமீடர்களுக்குள்ளேயே மொழி வித்தியாசம் ஏற்படுகிற நாடு நம்முடையது. ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராமர் பெயரைச் சொன்னால் புரிந்து கொள்ளாத இந்தியன் இருக்க முடியாது.
ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் சீதா ராம்!
PS: விரைவில் “ஸ்ரீ மஹா வீர வைபவம்” – ஸ்ரீமத் ராமாயணத்தை சுருக்கி கத்ய வடிவில் வேதாந்த தேசிகர் இயற்றிய காவியம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு எனது பக்தி பதிவில் வரவிருக்கிறது!!
ஸ்ரீராம நவமியன்று ஏரி காத்த ராமர் வைபவம் பதிவிட்டதற்கு நன்றிகள்.
ஸ்ரீ ராம ஜெய ராம் ஜெய ஜெய ராம
ஏரி காத்த ராமரை அருமையாகச் சொல்லி வைத்தீர்கள் இராம நவமி அன்று! மிக நன்று!
சர் தாமஸ் மன்றோ கங்காளம், கலெக்டர் ப்ரைஸ் கங்காளம் என்று இன்றும் ஆலய வட்டில்களைக் காணலாம்!
//வேதாந்த தேசிகர் இயற்றிய காவியம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு எனது பக்தி பதிவில் வரவிருக்கிறது!!//
அருமை! விரைவில் தாருங்கள்!
ஏரிகாத்த ராமர் கதை ராம நவமியில் அருமை!
ராம நாமம் வாழ்க வளர்க!
அன்புடன்
கமலா
ஏரி காத்த ராமர் கதையை எடுத்து உரைத்தமைக்கு நன்றி
Thanks for that eri kaattha raamar trivia