Double Agent - story
ஜனவரி 5, 2008 ஆல் Srikanth
நமது ஜனாதிபதிதான் இந்திய ரகசியங்களை திருட உதவப்போகிறார்.” என்று சொன்ன அருண்குமாரை அகலமான விழிகளோடு பார்த்தான் நேபால். நேபால் அண்டை நாட்டான். அருண்குமார் - மத்திய ரகசிய உளவுத்துறையில் ஜூனியர் கணினிப்பொறியாளன். நெற்றியை சொறிந்து கொண்டு எப்படி? என்று கேட்பதுபோல் நேபால் பார்த்தான்.
அருண் தொடர்ந்தான், “அரசின் ரகசியங்கள் மற்றும் செய்திப்பரிமாற்றங்கள் ஒரு பெரிய பாதுகாப்பான நெட்வொர்க்கில் வைத்து நடந்துவருகிறது. நமது ஜனாதிபதிதான் அதற்கு தனியார் சாப்ட்வேர்களை வாங்காமல் ஒபன் சோர்ஸ் என்ற முறையில் வெளிப்படையான சாப்ட்வேர்களை உபயோகப்படுத்தவேண்டும் என்ற கொள்கை அமுலாக முக்கிய காரணம். இது தான் நமது வேலையை சுலபமாக்கியிருக்கிறது….”
***
“தனியார் சாப்ட்வேர் என்றால் அதை எப்படி உருவாக்கினார்கள் என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதை ரகசியமாகவும் அந்த தனியார் கம்பெனிகளே பாது காப்பார்கள் - உதாரணத்துக்கு விண்டோஸ் ஒரு தனியார் சாப்ட்வேர். ஓபன் சோர்ஸ் என்பது ஒரு சாப்ட்வேரை எப்படி
உருவாக்கினார்கள் என்ற அதன் மூலத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவார்கள். நாமும் அந்த சாப்ட்வேர் எப்படி செயல் படுகிறது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம் - அதில் மாற்றமும் செய்யலாம் ஆனால் நாம் என்ன மாற்றம் செய்து வெளியிட்டாலும் அதன் ‘ஸோர்ஸ் கோடை’ வெளியிட்டாக வேண்டும் - இந்த வகை சாப்ட்வேர் வெளிப்படையான ஒன்று. இதற்கு ஜாவா, மற்றும் லினக்ஸ் உதாரணங்கள்” என்று விளக்கினான்.
“சரி அதனால் நீ என்ன செய்யப்போகிறாய் - இந்த அரசாங்கம் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் உபயோகிப்பதால் நமக்கு என்ன பயன்” என்றான் நேபால்.
“கேள் சொல்கிறேன்… ஜாவா ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள்… லினக்ஸ¤ம் ஒரு ஓபன் சோர்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்.. இவை இரண்டும் உருவாக்கிய ஸோர்ஸ் கோடுகள் இணையத்தில் கிடைக்கின்றான… ஐஐடியில் நான் படிக்கும் பொழுது இவற்றை தலைகீழாக புரட்டியிருக்கிறேன்… அதனால் இந்த மென்பொருள்களை உடைப்பது எப்படி என்று எனக்கு தெரியும்… என் ஆப்லட் ஒன்றை சர்வரில் ஏற்றி எல்லா கணினிகளுக்கு வலை மூலமாக பயணிக்க செய்து விட்டால் போதும்.. ஜாவாவின் க்ளாஸ் லோடரை ஏமாற்றி என் க்ளாஸ் பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே லோடாகி விடும் - அதனால் ஓவ்வொரு கணினியும் ஒரு சர்வராகி அதிலுள்ள எல்லா பைல்களும் என் பார்வைக்கு வந்து கொண்டே இருக்கும்” என்றான்…
திரு திரு என்று விழித்த நேபால் “சரி இந்த திட்டத்தில் நீ மட்டும் ஈடுபடுவதென்றால் அது எங்களுக்கு நஷ்டம்… ஏனென்றால் எந்த ரகசியம் நாங்கள் பெற்றாலும் எந்த நாசவேலை செய்தாலும் அதற்கு உன்னை மட்டுமே நம்பி நாங்கள் செய்யவேண்டும் அதனால் எங்கள் ஆள் ஒருவனையும் கூட வைத்து அவனுக்கும் கற்று கொடு ” என்றான். “ஓகே… ” என்று ஒத்துக்கொண்டான் அருண்.
***
மூன்று மாதம் கழித்து ஒருநாள், டில்லியின் பிசியான லோடி ரோடில், அருணும் இன்னொரு இளைஞனும். “கரண், நான் சொன்னது நினைவிருக்கிறதா… இந்த ப்ளாப்பியை வைத்துக்கொள்.. ரகசியமாதலால் இந்த ப்ளாப்பியின் பூட் செக்டாரில் விளையாடியிருக்கிறேன்… ஒரே ஒரு முறைதான் இதை உபயோகிக்க முடியும் - அதற்கு பிறகு தன்னைதானே அழித்துக்கொள்ளும் - உள் விவரங்கள் எல்லாம் பிடிஎ·ப் பார்மட்டில் இருக்கிறது… அதை காப்பி எடுக்கமுடியாது. ஆகையால் எல்லா கணினிகளிலும் இதை ப்போட்டு படிக்க முயற்சி பண்ணாதே… நீங்கள் எப்போது இதை ஓபன் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியவேண்டும் - ஒரு வேளை இந்தியாவை தாண்டுவதற்குள் நீ மாட்டிக்கொண்டால் நான் தப்பிக்கவேண்டுமே அதற்காக - ஆகையால் நெட்வொர்க் தொடர்புள்ள ஒரு கணினியில் தான் இதை ஓபன் செய்யவேண்டும்” என்று நிபந்தனைகளுடன் பிளாப்பியை ஒப்படைத்தான்.
***
இரண்டு மாதங்கள் கழித்து டில்லியில் வேறொடு இடத்தில் குண்டு வெடிக்க முயற்சி நடந்தது. அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து அரசின் புதிய திட்டங்கள் பற்றிய செய்தி கசிந்ததாக வதந்தி பரவியது.
காஷ்மீரில் இருபத்தி இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நடைபெறவிருக்கிற சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் யோசனைகளை எதிர்க்க போவதில்லை என்று அண்டைநாடு அறிவித்தது….
***
நான்கு மாதங்களுக்கு பிறகு அருண்குமார் கைது செய்யப்பட்டு சிறையில்….
“என்ன ஆபீஸர், எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது…” என்றார் கிழவர். சிறையில் அருண்குமாருடன் அவரும் அடைக்கப்பட்டிருந்தார். “நீங்கள் போட்டு கொடுத்த திட்டம் தானே சார்… நான் அவர்களுக்கு சொன்ன டெக்னிக்கை அவர்களிடமே உபயோகித்திருக்கிறேன்…” என்றான்.
“பையா, கலக்கறே சந்துரு…. அடுத்த வாரம் நீ அண்டை நாட்டு பிரஜை ஆகப்போகிறாய்” என்றார். “எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் சார்… ” என்றான் அருண்குமார் நெளிந்து கொண்டே…
***
அருண்குமார் நான்கு வாரங்கள் கழித்து கோர்ட்க்கு செல்லும் வழியில் காணாமல் போனான்…


