வருகின்ற September 15 ம் தேதி பிள்ளையார் சதுர்த்தி வருகிறது (இதை மறந்தாலும் கலைஞர் டீவி துவங்கப்படுவது அந்த நல்ல நாளில்தான் என்பது நினைவிருக்கலாம்
). பொதுவாக பிள்ளையார் சதுர்த்தி அன்று இரவு சந்திர தரிசனம் (நிலவை பார்த்தல்) கூடாது என்பர். இதே போல பொதுவாக ‘நாலாம் பிறை’யே கூட பார்க்கக்கூடாது என்றும் சொல்வார்கள். மித்ர அபவாத தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை. ஆனால் விபரீதமாக நாலாம் பிறைதான் கண்ணில் படும். (நாலாம் பிறை பார்த்தால் நாய் படாத பாடு படவேண்டிவரும் என்றும் சொல்வர்).
பகவான் க்ருஷ்ணரே ஒரு முறை நாலாம் பிறையை பார்த்து விடுகிறார். இதன் சம்பந்தமாக ஒரு புராணக்கதை உண்டு.
பகவான் க்ருஷ்ணர் ஒருமுறை சத்ராஜித் என்ற மன்னரை பார்க்கப்போனார். சத்ராஜித் மன்னன் சூரியனை வழிபட்டு சூரிய பகவானிடமிருந்து சியமந்தக மணி என்ற ரத்தினத்தை பெற்றவன். அவன் அந்த ரத்தினத்தை அணிந்து கொண்டு இருக்கும்போது அவனது உடலே சூரியனைப்போல ஒளிவீசுகிறது. இதைக் கண்ட க்ருஷ்ணர் அந்த ரத்தினத்தை வாங்கி பார்க்க வேண்டும் என்று கேட்க சத்ராஜித் மன்னன் மறுத்து விடுகிறான். பின்னர் க்ருஷ்ணர் துவாரகை திரும்பி விடுகிறார்.
பிறகு ஒரு சமயம் சத்ராஜித்தின் சகோதரன் ப்ரசேனன் என்பவன் அந்த ரத்தினத்தை அணிந்து கொண்டு காட்டு வேட்டையாட செல்லும் போது சிங்கம் ஒன்றினால் கொல்லப்படுகிறான். சிங்கம் அந்த ரத்தினத்தை எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. சத்ராஜித் மன்னனும் மற்ற பொதுமக்களும் க்ருஷ்ணர் மேல் சந்தேகப்பட்டு பேசுகிறார்கள். இதனால் பகவான் க்ருஷ்ணரே அவமானப்பட நேர்ந்தது.
பிறகு அந்த அவமானத்தை துடைக்க க்ருஷ்ணர் தாமே அந்த ரத்தினத்தை தேடி செல்வதாக முடிவு செய்து காட்டில் தேடுகிறார். கடைசியில் ஒரு குகையில் கரடி அரசனான ஜாம்பவான் (இராமாயணத்தில் வரும் ஜாம்பவான்) வசம் இருப்பதாக தெரியவரவே அங்கே செல்கிறார். (இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் ஆஞ்சனேயரும் ஜாம்பவானும் வருகிறார்கள்).
ஜாம்பவான் க்ருஷ்ணர்தான் இராமனாகவும் அவதரித்தவர் என்று தெரியாமல் சண்டையிடுகிறார். கட்டி புரண்டு சண்டை போடும் போது வந்தவர் தான் இராமரும் கூட என்று தெளிந்து மன்னிப்பு கோருகிறார். ஜாம்பவானின் மகளான ஜாம்பவதியையும் க்ருஷ்ணர் மணந்து கொள்கிறார். அந்த சியமந்தக மணியை திரும்ப ஜாம்பவானிடமிருந்து பெற்று சத்ராஜித் மன்னனிடம் ஒப்படைத்து அவமானத்தை தீர்த்துக்கொள்கிறார். சத்ராஜித் மன்னன் தவறாக சந்தேகப்பட்டதற்கு வருந்தி தன் மகள் சத்யபாமாவை க்ருஷ்ணருக்கே மணமுடித்து கொடுக்கிறான்.
மேற்கண்ட கதையை கேட்பது நாலாம் பிறை பார்த்த தோஷத்திற்கு பரிஹாரமாக சொல்வார்கள்.




கணபதி படம் அழகாக இருக்கிறது, அதிலும் வலம்புரி விநாயகர்!